லாஸ் ஏஞ்சலிஸ்: லாஸ் ஏஞ்சலிசில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளையும் நெருங்குவதால் தீ அணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
அக்கம்பக்க குடியிருப்புகளையும் தீ பதம்பார்த்து வருகிறது. காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் குடியிருப்பாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் மற்றொரு சுற்று பலத்த காற்று வீசியதால் தீ மேலும் பரவி வருகிறது. பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வீடுகள் உள்ள பெல் ஏர், பிரெண்டவுட் பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தீ அணைப்பாளர்கள் வீட்டு உரிமையாளர்களின் மாடங்களிலும் வளைந்து செல்லும் சாலைகளிலும் நின்றுகொண்டு தீயை அணைத்து வருகின்றனர். விமானங்கள் தொடர்ந்து தண்ணீரையும் தீத்தடுப்பு வேதிப் பொருளையும் கொட்டி வருகின்றன. இதையும் மீறி ஜனவரி 11ஆம் தேதி பிற்பகலில் ஒரு வீடு எரிந்து முற்றிலும் நாசமானது.
கலிஃபோர்னியாவின் பள்ளத்தாக்கு, ‘பிரெண்ட்வுட்’ மற்றும் ‘என்சினோ’ சுற்றுப்புறங்களின் பகுதிகள் மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவின் கலாசார நகைகளுக்கான இடமான கெட்டி நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற மக்களுக்கு கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காற்றின் வேகம் சற்று மெதுவடைந்த பிறகு ஜனவரி 11 ஆம் தேதியிலிருந்து மீண்டும் தீயைத் தூண்டிக்கூடிய பாலைவனக் காற்று மற்றும் ‘மிதமான முதல் வலுவான’ உள்ளூர்க் காற்று புதன்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை நிலையம் தெரிவித்தது.
ஆனால் அதிக காற்று இல்லாவிட்டாலும், லாஸ் ஏஞ்சலிஸின் வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள காட்டுத்தீ ஜனவரி 10 இரவு முதல் அடுத்த நாள் மற்ற வட்டார வறண்ட நிலப்பரப்பு முழுமைக்குப் பரவியது.
காட்டுத் தீயால் 23,000 ஏக்கர் நிலப்பரப்பு நாசமடைந்தது என்று கலிஃபோர்னியா மாநிலத்தின் தீயணைப்புத் துறை தெரிவித்தது. இதுவரை காட்டுத் தீக்கு 16 பேர் உயிரிழந்து விட்டனர். 180,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து மாற்று இடத்திற்குச் சென்றனர்.