ஆன்டானானரிவோ: குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் ஆண்மை நீக்கம் செய்யும் அதிரடிச் சட்டத்தை கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர் நிறைவேற்றியுள்ளது.
கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட அச்சட்டம் இப்போது அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 28 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதையடுத்து, இந்த அதிரடிச் சட்டம் அவசியம் என்று அந்நாட்டின் நீதியமைச்சர் தெரிவித்தார்.
சென்ற 2023ஆம் ஆண்டு மடகாஸ்கரில் கிட்டத்தட்ட 600 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதம் மட்டும் அத்தகைய 133 புகார்கள் பதிவாகியுள்ளன.
புதிய சட்டத்தின்கீழ், பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் ஆடவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றப்படும். பத்து முதல் 13 வயதிற்குட்பட்ட சிறாரைச் சீரழித்தால் அறுவை சிகிச்சை அல்லது வேதிப்பொருளை உட்செலுத்தி ஆண்மை நீக்கப்படும். 14 முதல் 17 வயதிற்குட்பட்ட சிறாரை வன்கொடுமை செய்வோருக்கு வேதிப்பொருளை உட்செலுத்தி ஆண்மை அகற்றப்படும்.
அதாவது, குழந்தையின் வயது குறைவாக இருந்தால் தண்டனை கடுமையானதாக இருக்கும் என்கிறார் நீதியமைச்சர்.
இந்த அதிரடிச் சட்டத்தை மடகாஸ்கர் மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
அதே நேரத்தில் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற சில அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.