தோக்கியோ: தென்மேற்கு ஜப்பானில் காணாமல் போன மருத்துவ ஹெலிகாப்டரில் இருந்த ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாகசாகி வட்டாரத்தில் உள்ள சுஷிமா தீவில் இருந்து ஃபுகுவோகா நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் செல்லும் ஹெலிகாப்டரில் மொத்தம் ஆறு பயணிகள் இருந்தனர்.
மருத்துவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக கடலோர காவல்படை திங்கட்கிழமை (ஏப்ரல் 7) தெரிவித்தது.
ஜப்பானின் வடமேற்குக் கடற்பகுதியில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவமனையின் தலைவர் ரியூஜி டோமினாகா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விபத்து மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.
தொடர்பு துண்டிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஆறு பயணிகளையும் சுற்றுக்காவல் கப்பல் ஹெலிகாப்டருடன் கண்டுபிடித்தது.
86 வயது மூதாட்டியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
86 வயது நோயாளி, அவரது 68 வயது குடும்ப உறுப்பினர், 34 வயது மருத்துவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக ஜப்பானின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சுயநினைவுடன் இருந்த மூவர் மிதவைகளைப் பிடித்துக்கொண்டு கடலில் மிதந்துகொண்டிருந்ததாக ஜப்பானியக் கடலோரக் காவல் படை கூறியது.
ஹெலிகாப்டர் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், “விமானத்தில் இருந்த விமானி மற்றும் பொறியாளர் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். வானிலை விமானத்திற்கு ஒரு பிரச்சினையாக இருந்ததாகத் தெரியவில்லை,” என்று திங்கட்கிழமை கூறினார்.
தேசிய கடல்துறைப் பாதுகாப்புக் குழு விசாரணையை மேற்கொள்ளும் என்று அவர் மேலும் கூறினார்.