ஜெனீவா: பிறந்த குழந்தைகளுக்கென தயாரிக்கப்பட்ட மலேரியா நோய் தடுப்பூசியின் முதல் சோதனைக்கான ஒப்புதலை உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வழங்கியது.
இதுநாள்வரை, சற்று வயது மூத்த பிள்ளைகளுக்குச் செலுத்தப்பட்ட தடுப்பூசி வகைகளே, பிறந்த குழந்தைகளுக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கும் போடப்பட்டன. அவற்றால் மருந்தின் அளவில் பிழைகளும், நச்சுத் தன்மையும், பின்விளைவுகளும் ஏற்படும் அபாயம் இருந்துவந்தது.
‘மருத்துவ தகுதி பெறுவதற்கு முந்தைய ஒப்புதலை’ வழங்கியதற்கான காரணங்களை உலக சுகாதார அமைப்பு விளக்கியது. அனைத்துலக ரீதியில் மருந்தின் தரம், பாதுகாப்பு, செயல்பாடு ஆகிய அம்சங்கள் தேவையான அளவு இருப்பதால் தடுப்பூசிக்கு அத்தகைய ஒப்புதல் வழங்கப்பட்டது என்று அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
“பல நூற்றாண்டுகளாக மலேரியா நோய் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்துள்ளது. பல சமூகங்கள் ஆரோக்கியம், நம்பிக்கை போன்றவற்றை இழந்தன. ஆனால் இன்று, நிலை மாறியுள்ளது. புதிய தடுப்பூசிகள், மருத்துவ ஆய்வுகள், சோதனைகள், அடுத்த தலைமுறை வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட கொசுவலைகள், மருந்துகள் என இளம் குழந்தைகள் நோயில் இருந்து மீண்டுவர உதவுகின்றன,” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியெசஸ் கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 282 மில்லியன் பேர்களுக்கு மலேரியா நோய்கண்டதாக பதிவு செய்யப்பட்டது. எண்பது நாடுகளைச் சேர்ந்த அவர்களில் 600,000 நோயாளிகள் மரணமடைந்தனர்.
ஆப்பிரிக்காவில் அதிக மலேரியா மரணங்கள்
ஆப்பிரிக்க கண்டத்தில் 95 விழுக்காட்டு நோய்களும் மரணங்களும் ஏற்படுகின்றன. ஐந்து வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் நான்கில் மூன்று பங்கு ஆப்பிரிக்காவில் மரணமடைகின்றனர். இந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.

