கோலாலம்பூர்: இவ்வாண்டு ஏப்ரலில் 7,057 ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்ததாக மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசீர் தெரிவித்துள்ளார்.
இது, மார்ச் மாதத்தில் வேலையிழந்த 5,855 பேரைவிட 21 விழுக்காடு அதிகம்.
இவ்வாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களைவிட இந்த எண்ணிக்கை குறைவு என்றபோதும் இது கவனம் செலுத்தப்பட வேண்டிய விவகாரம் என்று அமைச்சர் கூறினார்.
“ஒவ்வொரு வேலையிழப்பும் ஒரு குடும்பம் அதன் வருமானம் ஈட்டும் வழியை இழந்துவிட்டதைக் காட்டுகிறது. அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின்கீழ் வேலைவாய்ப்புக் காப்புறுதி நடைமுறைமூலம் உரிய உதவி கிடைப்பதை அரசு உறுதிசெய்யும்,” என்று அவர் சொன்னார்.
அந்தத் திட்டத்தின்கீழ், புதிய வேலை கிடைக்கும்வரை அவர்களுக்கு நிதியுதவியும் வேலை தேட உதவியும் வழங்கப்படும்.
முன்னதாக, மலேசியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2.9 விழுக்காடாகக் குறைந்தது என்று புள்ளிவிவரத்துறை கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) தெரிவித்திருந்தது.

