இஸ்கந்தர் புத்ரி: சரவாக் மாநிலத்தில் நிலவி வரும் புகைமூட்டத்தைக் குறைக்கவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும் செயற்கை மழை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹித் ஹமிடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அவர், மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் ஆலோசனையின் பேரில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.
தேசிய அளவிலான விளையாட்டு விழா ஒன்றைத் தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரவாக்கில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு அளவைக் குறைக்கச் செயற்கை மழை பெரிதும் உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, குச்சிங், ஸ்ரீ அமான் ஆகிய பகுதிகள் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு முறையே 238, 216 என மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் நீடிக்கின்றன.
அமான் பகுதியில் உள்ள படாங் ஆய் நீர்மின் நிலைய அணைக்கட்டின் நீர்மட்டம் ஆபத்தான ‘நிலை 3’க்குச் சரிந்துள்ளதால், அங்கு மழை பொழிய வைப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டச் செயற்கை மழை முயற்சி பலனளிக்காமல், மேகங்கள் இந்தோனீசியாவின் கலிமந்தான் பகுதிக்கு நகர்ந்த நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதிவரை இந்நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.


