மலேசியாவில் அடுத்தடுத்து வரும் சீனப் புத்தாண்டு, ரமலான்: சில்லறை வணிகம், விருந்தோம்பல் துறையில் பெரும் எழுச்சி

மலேசியாவில் அடுத்தடுத்து வரும் சீனப் புத்தாண்டு, ரமலான்: சில்லறை வணிகம், விருந்தோம்பல் துறையில் பெரும் எழுச்சி

2 mins read
6008a560-8172-425c-a06a-fe54b0b8a79f
ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 15) சண்டக்கானில் பண்டார் இன்டாவில் பார்ப்போரை மகிழ்வித்த சீனப் பாரம்பரியச் சிங்க நடனம். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் சீன சமூகத்தினருக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) சீனர்கள் ‘குதிரை ஆண்டை’ வரவேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து இரண்டு நாள்களில் ரமலான் மாதம் தொடங்கவுள்ளது. அடுத்த மாதம் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் மலேசியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருவதோடு, இனம், கலாசாரம் மற்றும் சமயம் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் ஒற்றுமையின் அழகை மேலும் பறை[Ϟ]சாற்றுகின்றன.

குறிப்பாக 2029 முதல் 2031 வரையிலான ஆண்டுகளில், நோன்புப் பெருநாள் மற்றும் சீனப் புத்தாண்டு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் வரும் ‘கோங் சி ராயா’ நிகழ்வை மலேசியர்கள் காணவுள்ளனர்.

இதுபோன்ற நிகழ்வு 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக 1963ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 1996ஆம் ஆண்டு முதல் 1998 ஆண்டு வரையிலும் மலேசியா இந்த ‘கோங் சி ராயா’வை அனுபவித்துள்ளது.

இரு பெரும் பண்டிகைகளும் ஒன்றாக வரும்போது, அந்தப் பண்டிகைக்கால உற்சாகம் உண்மையிலேயே அசாதாரணமானது.

இந்த இரட்டைக் கொண்டாட்டங்கள் சில்லறை வணிகத் துறைக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. நாட்டில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பண்டிகைகளுக்காகத் தாராளமாகச் செலவிடுவதால் விற்பனை அதிகரித்துள்ளது.

விருந்தோம்பல் மற்றும் உணவுத் துறையைப் பொறுத்தவரை, இது விற்பனை உயர்வு மட்டுமல்ல, கலாசாரங்களைக் கடந்து அனைவரையும் கவரும் வகையிலான உணவுகளை உருவாக்குவதில் தங்கள் படைப்பாற்றலைக் காட்ட ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. ‘மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026’ எனும் இயக்கத்துடன் இணைந்து, மலேசியாவின் தனித்துவத்தை வெளிநாட்டுப் பயணிகளுக்குக் காட்ட இது ஒரு சிறந்த தளமாக அமையும்.

குறிப்புச் சொற்கள்