கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டுக்கு முன்பும் பின்பும் குறிப்பிட்ட காலத்துக்குக் கனரக வாகனங்கள் சாலைகளில் நுழைய தடை விதிக்கப்படும் என்று மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 14, 15, 21, 22 ஆகிய தேதிகளில் தடை நடப்பில் இருக்கும் என்று மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் ஏடி ஃபாட்லி ராம்லி தெரிவித்தார்.
“இது விபத்து அபாயங்களைக் குறைப்பதையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“அனைத்து வாகன ஓட்டுநர்களும் தொடர்புடைய வாகன பயனர்களும் இதைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்துச் சாலைப் பயனர்களும் போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிக்கவும் தங்கள் வாகனங்கள் பாதுகாப்பான செயல்பாட்டு நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 5) தெரிவித்தார்.
7,500 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட லாரிகள், கனரக வாகனங்கள் மற்றும் சிமெண்ட், எஃகு, மணல், கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள்களில் தடை எப்போதும் நடப்பில் இருக்கும்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொருள்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் லாரிகளுக்கும் துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்களிலிருந்து மின்னணு பொருள்கள் அல்லது ரசாயனப் பொருள்களை ஒரே மாநிலத்திற்குள் உள்ள தொழில்துறைப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் தடை பொருந்தும். தொழில்துறைப் பகுதிகளிலிருந்து துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்களுக்கும் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் இத்தடை பொருந்தும்.
இந்தத் தடை, செம்பனை எண்ணெய், ரப்பர் இதர பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கும் பொருந்தும்.

