கோலாலம்பூர்: சாலை விபத்துகளை விசாரிக்கும் அமைப்பை உருவாக்க மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மலேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் அந்த அமைப்பை உருவாக்குவது குறித்துப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தகவல் வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைப்பை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டால் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
தற்போது அமைச்சரவை ஒப்புதலுக்கான வேலைகள் நடந்து வருகின்றன என்று திரு லோக் குறிப்பிட்டார். கடந்த மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பல்வேறு பிரிவுகளிடம் பேச்சு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“சாபா, சரவாக் மாநில அரசாங்கங்களுடனும் பேசுவோம். அமைப்புக்கு எத்தனை ஊழியர்கள் தேவைப்படுவர் என்பது குறித்து விவாதிக்கப்படும். வரைவு மசோதா மற்றும் தேவையான சட்டத் திருத்தங்களில் வரும் மாற்றம் போன்றவற்றை வரைதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சர் லோக் கூறினார்.
மலேசியாவில் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

