கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், மின்வாகனங்களுக்கான மின்னூட்டும் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணியை விரைவுபடுத்த அதன் கொள்கைகளையும் சலுகைகளையும் மேம்படுத்தி வருகிறது.
அதேநேரம், அதிவேக மின்னூட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அதற்கு மின்விநியோகக் கட்டமைப்பு ஆதரவளிப்பதை உறுதிசெய்யச் சேவை நிறுவனங்களுடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
மின்வாகனங்களின் எண்ணிக்கை கூடிவருகிறது. அதனால் மின்னூட்டிகளுக்கு மின்சாரம் வழங்கத் தேவையான கூடுதல் துணை நிலையங்களை அமைப்பதற்காக, தெனாகா நேஷனலுடன் அது இணைந்து செயல்படுகிறது. முதலீடு, வர்த்தக, தொழில் துணை அமைச்சர் சிம் சு ஸின் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
“மின்வாகனங்கள் புதிய தொழில்நுட்பம் என்பதோடு அது ஒரு தயாரிப்புப் பிரிவு. இந்தத் தொழில்துறையை நாம் மேம்படுத்தும்போது, அரசாங்கம் தொடர்ந்து தனது கொள்கைகளையும் ஊக்கத்தொகைகளையும் மாற்றியமைத்து, மின்னூட்டக் கூடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது,” என்று அவர் புதன்கிழமை (ஜூலை 8) கூறினார்.
துணை நிலையங்கள், மின்னூட்டக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக உள்ளன என்று திரு சிம் குறிப்பிட்டார்.
“மின்னூட்டக் கூடங்கள் திறம்படச் செயல்படுவதற்குத் துணை மின் நிலையங்கள் தேவை. நாம் இதுபோன்ற கூடுதல் துணை மின் நிலையங்களை அமைக்க வேண்டும்,” என்றார் அவர்.
மின்னூட்ட உள்கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்வதற்காக, மின்னூட்டக் கூடங்களை நடத்துவோருக்குக் குறிப்பிட்ட ஊக்கத்தொகைகளை அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் அவர் சொன்னார்.

