தெலுக் இந்தான்: கடந்த ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சியின்போது முதியவர் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொன்றதாக மலேசிய இளையர் நால்வர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிரகாஷ் ராவ், அழகேசுவரன், தியாகேசன், சங்கர் என்ற அந்த இளையர் நால்வர்க்கும் வயது 25. குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனைத் தாங்கள் புரிந்துகொண்டதாக அந்நால்வரும் தலையசைத்தனர்.
கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின்கீழ் வருவதால் எந்த வாக்குமூலமும் பதிவுசெய்யப்படவில்லை.
இவ்வழக்கில் தொடர்புடைய இன்னொரு சந்தேகப் பேர்வழி தலைமறைவாக இருக்கிறார்.
ஹிலிர் பேராக்கில் ஏப்ரல் 17ஆம் தேதி காலையில் திரு என்.ஜெயகோபி, 70, என்ற முதியவரை அவரது வீட்டில் வைத்து வெட்டியதாக அந்த ஐவர்மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிடில் குறைந்தது 12 பிரம்படிகளையும் அவர்கள் எதிர்நோக்கலாம்.
அவர்கள் சார்பில் வழக்கறிஞர் எவரும் முன்னிலையாகவில்லை. இவ்வழக்கு ஜூலை 13ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

