கோலாலம்பூர்: மலேசியாவில் குழந்தைகள் இணையத்தளங்களில் இடம்பெறும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பார்ப்பதைக் குறைக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும், ஜூன் 1 முதல் புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும்.
மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் அந்தத் தகவலை வெள்ளிக்கிழமை (மே 22) தெரிவித்தது.
புதிய விதிமுறைகளின்படி, 16 வயதுக்குக் கீழ் உள்ள பயனீட்டாளர்கள் புதிய கணக்குகளைப் பதிவு செய்வதையும் கணக்குகளைத் தங்களின் பெயரில் வைத்திருப்பதையும் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்களை இணையச் சேவை வழங்குநர்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அதோடு, அவற்றின் இணையத்தளங்களில் அவை மேலும் வலுவான உள்ளடக்கக் கண்காணிப்பை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று ஆணையம் கூறியது.
இணையத்தளங்களில் அதிக ஆபத்து நிறைந்த அம்சங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, வயதுக்கு ஏற்ற பாதுகாப்பையும் கட்டுப்பாடுகளையும் வழங்குவதே அந்நடவடிக்கைகளின் நோக்கம் என்றது அது.
இணையச் சேவை நிறுவனங்கள் அவற்றின் தளங்களில், பாதிப்புகள் குறித்து உடனடியாகப் புகாரளிக்கும் மற்றும் அதற்குத் தீர்வுகாணும் பயனுள்ள வழிமுறைகளைக் கொண்டிருக்கவேண்டும்; விளம்பரதாரர்களைச் சரிபார்க்கும் பாதுகாப்பு முறைகளைக் கொண்டிருக்கவேண்டும்; தேவைப்படும் இடங்களில் போலியாக மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கங்களைக் குறித்துவைக்கவேண்டும்,” என்று அந்த ஆணையம் தெரிவித்தது.
அந்தப் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அவற்றின் தளங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக இணைய நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும் என்று ஆணையம் கூறியது.
இருப்பினும், அந்த அவகாசம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை அது குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

