பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஒவ்வொரு 1 மணிநேரம் 56 நிமிடங்களுக்கும் சாலை விபத்தில் ஒருவர் மரணமடைகிறார். இதை 2024ஆம் ஆண்டு மார்ச் 14 முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் 18 வரையிலான அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதைவிட அதிர்ச்சி தரும் தகவலாக ஒவ்வொரு 50 விநாடிகளில் ஒரு சாலை விபத்து ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெருநாள் நெருங்கும் வேளையில், அவ்வமயம் மில்லியன்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நகரங்களுக்கு திரும்பவுள்ள நிலையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அன்றாட சாலை விபத்துகள் குறித்த 2024ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களை வெளியிட சாலைப் பாதுகாப்பு, சாலைப் போக்குவரத்து நெரிசல் தொடர்பான அமைச்சரவைக் குழு முடிவெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விழாக் கொண்டாட்டங்கள் நெருங்கும் நாட்களில் சாலை விபத்துகள் அதிகரிப்பதாகவும் பின்னர் கொண்டாட்ட நாள்களில் அவை குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கொண்டாட்டங்கள் முடிவடைந்து சாலைப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும்போது அவை மீண்டும் அதிகரிப்பதாக விளக்கப்படுகிறது.
இதன்படி, கடந்த 2024ஆம் ஆண்டில் நோன்புப் பெருநாளுக்கு முந்தைய வாரத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி 2,185 விபத்துகள், ஏப்ரல் 4ஆம் தேதி 2,160 விபத்துகள், ஏப்ரல் 6ஆம் தேதி 2,156 விபத்துகள் பதிவாகியதாகக் கூறப்படுகிறது. பின்னர், பெருநாள் கொண்டாட்ட நாளில் சிறிது குறைந்த சாலை விபத்துகள் பெருநாள் முடிந்த நான்கு நாள்கள் ஆன நிலையில் ஏப்ரல் 15ஆம் தேதி மீண்டும் விபத்து எண்ணிக்கை 2,146 என உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றாட சராசரி அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் திங்கட்கிழமைகளிலும் (1,803) அதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமைகளிலும் (1,802) அதற்கும் அடுத்ததாக செவ்வாய்க்கிழமைகளிலும் (1,796) ஏற்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.