கோலாலம்பூர்: மலேசியாவின் தொடர்பு, பல்லூடக ஆணையம், தீங்கு விளைவிக்கக்கூடிய பதிவுகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி டிக்டாக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
மலேசிய அரசக் குடும்பத்திற்கு மிகவும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் பரவியதைத் தொடர்ந்து, ஆணையம் வியாழக்கிழமை (மே 21) அவ்வாறு சொன்னது.
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் பதிவுகளைப் பதிவேற்றிய போலிக் கணக்குமீது தகுந்த, துரிதமான நடவடிக்கை எடுக்கும்படி ஆணையம் சொன்னது.
செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட காணொளிகளும் படங்களும் மாமன்னரை இழிவுபடுத்தும் வகையில் காணப்பட்டதை ஆணையம் சுட்டியது.
அத்தகைய பதிவுகளுக்கு எதிராக ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்தது.
அதுபோன்ற பதிவுகள் அதிக சர்ச்சைக்குரியவை என்றும் நாட்டு ஒழுங்கைச் சீர்குலைக்கக்கூடியவை என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும்படி ஆணையம் டிக்டாக் நிறுவனத்திடம் கூறியது.

