சிலாங்கூர்: மலேசியா முதன்முதலாக இருளில் ஒளிரும் சாலைக் குறிகளை நடைமுறைப் படுத்தியுள்ளது.
சாலையைப் பயன்படுத்துவோர் அந்தத் திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
அந்த முன்னோடித் திட்டம் சிலாங்கூரின் செமென்யிஹ் நகருக்கு அருகில் உள்ள இரு தடச் சாலையில் அக்டோபர் 28ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஹுலு லங்காட் பொதுப் பணித் துறை கூறியது.
சாலைப் பொறியியலில் புத்தாக்கத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இந்த இருளில் ஒளிரும் சாலைக் குறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன,” என்று பொதுப் பணித்துறை தெரிவித்தது.
சாலையில் குறிகள் போடப்படுவதற்கு முன்னர் சுற்றியுள்ள பகுதி தெரு விளக்குகளின்றி இருண்டு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் காரணமாக, இரவில் அந்தப் பகுதியைக் கடந்துசென்றவர்களுக்குச் சிரமமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
பலர் சமூக ஊடகங்களில் இதன் தொடர்பில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
புதிய திட்டத்தை வரவேற்ற மலேசியர்கள், சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை அது அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.
இருளில் ஒளிரும் சாலைக் குறித் திட்டம் நாடு முழுவதுக்கும், குறிப்பாக தெரு விளக்குகள் இல்லாத கிராமப்புறப் பகுதிகளுக்கு நீட்டிக்கப்படவேண்டும் என்று பல மலேசியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இருப்பினும், சாலைகள் ஒழுங்காகக் கட்டிக்காக்கப்படவேண்டும் என்று சிலர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர்.