கோலாலம்பூர்: மலேசிய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள 10 விழுக்காடு வரியை மலேசியா கடுமையாகக் கருதுவதாக அந்நாட்டின் முதலீடு, வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்து உள்ளது.
இருப்பினும் தாராள, நியாயமான வர்த்தக உணர்வைக் கட்டிக்காக்கும் நோக்கில் அமெரிக்க அதிகாரிகளுடன் மலேசியா பேச்சு நடத்த உள்ளதாக அது தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
அத்தகைய வர்த்தக உணர்வுக்கு மதிப்பளித்து, பதிலுக்குப் பதில் வரி விதிப்பதை மலேசியா பரிசீலிக்காது என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
புதிய வரிவிதிப்பு பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் உலக வர்த்தகத்திலும் வளர்ச்சியிலும் தாக்கங்களை உருவாக்கும் என்றது அது.
மலேசியாவுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து தேசிய உலகப் பொருளியல் தளபத்திய நிலையம் (NGCC) ஆராய்ந்து, நாட்டின் பொருளியல் மற்றும் தொழில்துறைகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, விரிவான பலமுனை உத்தியை வகுக்கும் என்று அமைச்சு தெரிவித்து உள்ளது.
“இருதரப்பு வர்த்தகம் மூலம் கிடைக்கும் ஆதாயங்களைக் கணக்கிட வர்த்தக, முதலீட்டுக் கட்டமைப்பு உடன்பாட்டை மலேசியா பயன்படுத்தும்.
“பகுதி மின்கடத்தி, ஆகாயவெளி, மின்னிலக்கப் பொருளியல் ஆகிய துறைகளில் உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான அமெரிக்காவுடனான தொழில்நுட்பப் பாதுகாப்பு உடன்பாட்டை மலேசியா பின்பற்ற அது அவசியம்,” என்றது அமைச்சு.
கடந்த ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவின் வர்த்தக உபரிப் பட்டியலில் US$24.8 பில்லியனுடன் (S$33.3 பில்லியன்) மலேசியா 15வது இடத்தில் உள்ளது.