கோத்தா திங்கி: மலேசிய அரசாங்கம் உணவு இறக்குமதிகளை 2050ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு குறைத்திட திட்டமிடுகிறது.
உணவுக்கென வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை இந்நடவடிக்கை கட்டுப்படுத்த உதவும் என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது சாஹிட் ஹமிதி, பண்டார் தெங்காரா பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 5) நடந்த ‘ரிஸ்டா அக்ரோ மெஜஸ்ட்டிக்’ என்ற வேளாண் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
கிராமப்புற வட்டார மேம்பாட்டுத் துறையின் அமைச்சருமான திரு அகமது சாஹிட், உணவு இறக்குமதிகளுக்கு மலேசியா அதிக கட்டணம் செலுத்துகிறது. எனவே அதனைக் கட்டுப்படுத்த இலக்குகளை அரசாங்கம் அமைத்துள்ளது என்றார்.
ஏனெனில், ஆண்டுக்கு $25.37 பில்லியன் (மலேசிய ரிங்கிட் 80 பில்லியன்) மதிப்புள்ள உணவுகளை மலேசியா இறக்குமதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த 30 ஆண்டுகளில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கென அவரது அமைச்சு ஒரு நீண்டகாலத் திட்டத்தை வடிவமைத்துள்ளது என்று அவர் கூறினார்.
தற்போது ஆண்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 80 பில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான உணவுப் பொருள்களை அமைச்சின்கீழ் செயல்படும் துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் குறைக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
2040ஆம் ஆண்டுக்குள் 15 விழுக்காடும் 2040ஆம் ஆண்டுக்குள் 30 விழுக்காடும் 2050ஆம் ஆண்டுக்குள் நட்டின் இலக்கான 50 விழுக்காட்டையும் மலேசியா எட்ட முடியும் என்று அவர் விளக்கினார்.
அரசு நிலங்கள்
முறையாகப் பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை திட்டத்தில் ஈடுபடுத்துவது முக்கிய அங்கமாகும்.
வேளாண் திட்டங்களில் கால்நடை சார்ந்த விவசாயத்தை வலுப்படுத்த, விலங்கியல் சேவைத் துறை, அரசாங்க அமைப்புகள் ஆகியவை ஒருங்கிணைந்து அரசு நிலங்களை மேம்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.

