தொடர் கொள்ளை: மலேசியாவில் இரு வியட்னாமிய ஆடவர்கள் சுட்டுக்கொலை

1 mins read
acafb981-d37b-44e4-a034-e3c8c007bb2d
சம்பவத்தை செய்தியாளர்களிடம் விளக்கிய பினாங்கு மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி ஹம்சா அகமது. - படம்: த ஸ்டார்

நிபோங் தெபால்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் இரு வியட்னாமிய ஆடவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வெட்டுக்கத்தியால் காவல்துறை அதிகாரிகளைத் தாக்க முயன்றபோது அவ்விருவரும் சுடப்பட்டனர்.

சம்பவம் குறித்து பினாங்கு மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி ஹம்சா அகமது செய்தியாளர்களிடம் விளக்கினார்.

“குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது அதிகாலை 3.20 மணியளவில் நிபோங் தெபாலின் புக்கிட் பாஞ்சோரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இரு ஆடவர்கள் தப்பி ஓடினர்.

“அதிகாரிகள் துரத்தியபோது வெட்டுக்கத்தியால் அவர்களை அவ்விருவரும் தாக்கினார்.

“தற்காப்புக்காக அந்த ஆடவர்களை நோக்கி அதிகாரிகள் சுட்டனர். சுடப்பட்டு மாண்டவர்கள் 38 மற்றும் 39 வயதுடையவர்கள்.

“சுற்றுலா விசாவில் மலேசியா வந்த அந்த இரு வியட்னாமியர்களும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். ஏராளமான வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் அவ்விருவரும் கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்பட்டது.

“பினாங்கு, கெடா மாநிலங்களில் மட்டும் அத்துமீறி நுழைந்து கொள்ளையடிக்கப்பட்டதாக 11 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அந்தச் சம்பவங்களில் 317,700 ரிங்கிட் தொகை பறிபோனது,” என்றார் அந்த அதிகாரி.

குறிப்புச் சொற்கள்