கோலாலம்பூர்: மலேசியா கடந்த ஜூன் மாதம் இறுதி வரை 1எம்டிபி தொடர்பான கடன்களுக்காக 42.5 பில்லியன் ரிங்கிட் செலுத்தியுள்ளது. அதே வேளையில் இந்த ஊழல் தொடர்பாக 31.3 பில்லியன் ரிங்கிட் தொகையை மீட்டெடுத்துள்ளது. மேலும் மீட்புகள் ஏதும் இல்லையெனில், அரசாங்கம் 20.1 பில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்று அந்நாட்டின் நிதி துணையமைச்சர் லியூ சின் டோங் வியாழக்கிழமையன்று (ஜூலை 9) தெரிவித்தார். இந்தக் கடனில் 2039ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையும் அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய இஸ்லாமியப் பத்திரமும் அடங்கும்.
எஞ்சிய கடன்களில் மலேசிய அரசாங்கம் 8.9 பில்லியன் ரிங்கிட் (S$2.8 பில்லியன்) செலுத்த வேண்டும் என்று திரு லியூ மலேசிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1MDB தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு 2022 முதல் சிறையில் உள்ளார். இந்த ஊழலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் ஜோ கோ என்றழைக்கப்படும் லோ டைக் ஜோவை மலேசியாவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவர் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார்.
2025ஆம் ஆண்டில் ஜோ லோ மற்றும் சீனக் குழுவினர் சமரசம் பேச மலேசியாவுக்குள் நுழைந்தனர் என்று பேசப்படுகிறது. இதைத் திரு லியூ மறுத்தார்.

