கோலாலம்பூர்: ஜோகூரில் அமையும் ‘ஃபாரஸ்ட் சிட்டி’யில் குடும்ப அலுவலகங்களுக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசாங்கம், செப்டம்பர் 20ஆம் தேதி இவ்வாறு அறிவித்தது.
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இது நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் குடும்ப அலுவலகங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் முதல் இடமாக ‘ஃபாரஸ்ட் சிட்டி’ விளங்கும் என்று நிதி இரண்டாம் அமைச்சர் அமிர் ஹம்சா அஸிஸான் கூறினார்.
‘ஃபாரஸ்ட் சிட்டி’ மேம்பாட்டுத் திட்டத்துக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2,800 ஹெக்டர் பரப்பளவிலான அத்திட்டம் சிறப்புப் பொருளியல் வட்டாரமாக 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு முதலீட்டையும் பொருளியல் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் அத்திட்டத்துக்குப் புத்துயிரூட்டும் பல்வேறு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக மலேசிய அரசாங்கம் வரி விலக்கை அறிவித்துள்ளது.
வட்டார, மலேசியக் குடும்பங்கள் அவற்றின் சொத்து நிர்வாகத்திற்கு மலேசியாவைத் தேர்ந்தெடுக்க ஈர்ப்பது இதன் நோக்கம் என்றார் திரு அமிர் ஹம்சா.
தொடர்புடைய செய்திகள்
சிறந்த உள்கட்டமைப்பு, போட்டித்தன்மை மிக்க திறனாளர்கள், வலுவான பொதுச் சட்ட நடைமுறைகள், திறமையான நிர்வாகம் ஆகியவற்றின் ஆதரவுடன் குடும்ப அலுவலகங்களுக்கான வாய்ப்புகள் இங்கு ஏராளம்,” என்றார் அவர்.
செப்டம்பர் 20ஆம் தேதி, இந்தச் சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பில் மேலும் சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
நிதித் தொழில்நுட்பத்துக்கும் வெளிநாட்டு கட்டணச் சேவை நிறுவனங்களுக்கும் சிறப்புச் சலுகையாக ஐந்து விழுக்காட்டு வரி, நிதித்துறை நிறுவனங்களுக்கு இடமாற்றச் செலவுக்கான ஊக்கத்தொகை, மேம்பட்ட தொழில்துறைக் கட்டடப் படித்தொகை போன்றவையும் அடங்கும்.
இந்நிலையில், ‘ஃபாரஸ்ட் சிட்டி’ சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத் திட்டங்கள், ஜோகூருக்கு மட்டுமன்றி மலேசியா முழுவதற்குமான நிதி வளர்ச்சிக்கு உதவும் என்று ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி கூறியுள்ளார்.
மாநில அரசாங்கத்தின் சார்பில் மலேசியாவின் மத்திய அரசாங்கத்திற்கும் குறிப்பாகப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கும் நிதி இரண்டாம் அமைச்சர் அமிர் ஹம்ஸா அஸிஸானுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.