பெட்டாலிங் ஜெயா: சோல் நோக்கிப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) விமானம் ஒன்று, சிறிது நேரத்தில் புறப்பட்ட இடத்திற்கே திருப்பிவிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) மாஸ் ‘எம்எச்66’ விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது. ஆனால் ஒன்றரை மணி நேரத்தில் அந்த விமானம் மீண்டும் கோலாலம்பூருக்குத் திரும்பியது என்று ‘ஃபிளைட்ரேடார்24’ எனும் இணையத்தளத்தின் தரவு தெரிவித்தது.
மாஸ் விமானங்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களையடுத்து இது நிகழ்ந்துள்ளது.
ஆகஸ்ட் 22ஆம் தேதி சவூதி அரேபியாவின் மதீனாவுக்குப் புறப்பட்ட மாஸ் விமானம் மீண்டும் கோலாலம்பூர் விமான நிலையத்திற்குத் திரும்பியது. இது, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நிகழ்ந்துள்ள 3வது சம்பவமாகும்.
‘ஃபிளைட்ரேடார்24’ தரவுகளின்படி கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.23 மணிக்கு மதீனாவுக்குப் புறப்பட்ட ‘எம்எச்152’ விமானம், அந்தமான் கடலில் நிக்கோபார் தீவுகளுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது புறப்பட்ட இடத்திற்குத் திரும்பியது.
இதற்கு முந்தைய நாள் ஷாங்காய் நோக்கிப் புறப்பட்ட மாஸ் ‘எம்எச்386’ விமானம் அழுத்தம் காரணமாக மீண்டும் கோலாலம்பூர் விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி மெல்பர்னிலிருந்து கோலாலம்பூர் வழியாகச் சென்ற எம்எச்128 விமானமும் ஆஸ்திரேலியாவில் உள்ள எலிஸ் ஸ்பிரிங்சில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.