கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரை லெபனானைத் தளமாகக் கொண்ட ‘குளோபல் ராயல்டி டிரேடிங்’ நிறுவனத்திற்கு 67.5 மில்லியன் ரிங்கிட் ($21.3 மில்லியன்) இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த நிறுவனத்திடம் திருப்பிக் கொடுக்கப்படாத 43 நகைகளுக்காக இழப்பீட்டைக் கொடுக்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
2018 மே 17ஆம் தேதி ரோஸ்மா தங்கியிருந்த பெவிலியனில் உள்ள வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
75 வயது ரோஸ்மா தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட 44 நகைகளும் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாய்ப் பொய்யுரைத்தார் என்று குளோபல் ராயல்டி குற்றஞ்சாட்டியது. அதன் தொடர்பில் நிறுவனம் அவர்மீது 2023 மார்ச் 29ஆம் தேதி வழக்கு தொடுத்தது.
அந்த 44 பொருள்களில் ஒன்று மட்டுமே காவல்துறையிடம் இருந்ததாகவும் எஞ்சிய 43 நகைகளும் காணாமல் போய்விட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.
பெய்ரூட்டைத் தளமாகக் கொண்ட அந்நிறுவனம், டேவிட் குருபாதம் மற்றும் கோய் சட்ட நிறுவனத்தின்மூலம் ரோஸ்மாவுக்கு எதிரான வழக்கைப் பதிவுசெய்தது.
வைரச் சங்கிலிகள், காதணிகள், மோதிரங்கள், வளையல்கள், கிரீடங்கள் முதலியவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

