புத்ரஜெயா: மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் ஜனவரி 29ஆம் தேதி இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவுள்ளார்.
தமது சொத்துகளைப் பற்றி தெரிவிக்க தவறியதால் அந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலையாகும் நாளுக்குக் காத்திருப்பதாக துன் டயிம் கூறியிருக்கிறார்.
குற்றச்சாட்டுகள் குறித்து தமது வழக்கறிஞர்கள் தம்மிடம் தெரிவித்திருப்பதாக அவர் சொன்னார். 84 வயதான அவர் ஊழல் விசாரணையாளர்கள் தம்மிடமிருந்து ஜனவரி 26ஆம் தேதி வாக்குமூலம் பெற்றதாகவும் கூறினார்.
இதற்கிடையே, குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க, திரு டயிம் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்படுவார் என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
ஜனவரி 24ஆம் தேதி திரு டயிமை குற்றஞ்சாட்டுவதற்கான ஒப்புதலை வழங்கியதாக ஆணையம் கூறியது. இருப்பினும், அவர் மருத்துவமனையில் இருந்ததால் அது சாத்தியமாகவில்லை என்றும் அது தெரிவித்தது.
திரு டயிம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் இருந்தார் என்றும் அவர் ஜனவரி 25ஆம் தேதி வீடு திரும்பினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், திரு டயிமின் குடும்பத்தாருக்குச் சொந்தமான 60 மாடி ‘மெனாரா இல்ஹாம்’ கட்டடத்தை ஆணையம் கைப்பற்றியது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ், அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்தக் கட்டடம் கைப்பற்றப்பட்டதாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.