பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் உணவு விநியோகம் தொடர்ந்து சீராக உள்ளது. ஆனால் அதிகரித்து வரும் செலவுகளால் வரும் மாதங்களில் விலை உயர வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் விவசாயம், உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகம்மது சாபு தெரிவித்தார்.
அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில், உணவுப் பொருள்களின் விலையில் சில அழுத்தங்கள் ஏற்படலாம் என்று அவர் கூறினார்.
“உரம், கால்நடைத் தீவனம் மற்றும் எரிபொருள் போன்றவற்றின் செலவுகள் அதிகரிப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். உதாரணமாக, கோழிப் பண்ணைச் செலவில் 70 விழுக்காடு வரை கால்நடைத் தீவனமே ஆக்கிரமிக்கிறது. அதேபோல காய்கறி பயிரிடுதல் செலவில் 40 முதல் 50 விழுக்காடு உரத்துக்கான செலவாக இருக்கலாம். இச்செலவுகள் அதிகரிக்கும்போது, சந்தை விலையும் பாதிக்கப்படலாம்,” என்று மே 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
உணவு விநியோகத்தை சீராகப் பராமரிக்கவும், விலையைம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் தேசியப் பொருளியல் நடவடிக்கை மன்றத்தை அமைத்தது உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சர் முகம்மது சாபு தெரிவித்தார்.

