புத்ராஜெயா: ரோன்(RON95) பெட்ரோலுக்கு வழங்கப்படும் விலைக்கழிவுக்கான கட்டுப்பாட்டை மலேசியாவின் உள்ளூர் வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு முடுக்கிவிடுகிறது.
புடி95 எனும் திட்டத்தின்கீழ் இந்த விலைக்கழிவு வழங்கப்படுகிறது. விலைக்கழிவு தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க உளவுத்துறைத் தகவல்களின் உதவியோடு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புடி95 திட்டத்தைச் செயல்படுத்துவதில் எந்தக் குறைபாடும் இல்லாதிருப்பதை உறுதிசெய்ய இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்ளூர் வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் தலைமை இயக்குநர் அஸ்மான் அதாம் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் தொடரும் பூசல் காரணமாக உலகளவில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் வெளிநாட்டுத் தரப்புகள் மலேசியாவில் மலிவு விலையில் எண்ணெய் வாங்க முயற்சி செய்யக்கூடும் என்றும் அவர் சுட்டினார்.
“எல்லை நுழைவாயில்களில் உளவுத்துறை சார்ந்த அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவோம், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துவோம்,” என்று திரு அஸ்மான் அதாம், பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அண்மையில் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியப் பூசல் காரணமாக சந்தையில் விலை அதிகரித்திருந்தாலும், புடி95 திட்டத்தின்கீழ் சலுகை விலையில் வழங்கப்படும் ரோன்95 பெட்ரோலின் விலை தொடர்ந்து லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாக இருக்கும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் புதன்கிழமை (மார்ச் 11) கூறியிருந்தார்.

