ஜோகூர் பாரு: கடந்த பத்தாண்டுகளாக நேர்மையாகப் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு மலேசியாவின் ஜோகூரில் செயல்படும் நகைக்கடை புத்தம் புதிய காரைப் பரிசாக அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த ஊழியரின் ‘இடைவிடா முயற்சிகளையும் குறிப்பிடும்படியான பங்களிப்புகளையும்’ அங்கீகரிக்கும் விதமாக கார் பரிசளித்ததாக ‘டியான்சி ஜுவெல்லரி’ தெரிவித்துள்ளது.
அந்த புரோட்டான் எக்ஸ்50 ‘எஸ்யுவி’ காரின் விலை 113,000 ரிங்கிட் (S$32,200) என ‘புரோட்டான்’ இணையத்தளம் குறிப்பிடுகிறது.
“மதிப்புமிக்க, ஊக்கமளிக்கும், அங்கீகரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றுகிறோம் எனும்படியான வேலைச்சூழலை உருவாக்க கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று டியான்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோகூரில் அந்நிறுவனத்திற்கு நான்கு நகைக்கடைகள் உள்ளன.
கார் பரிசு பெற்ற நி ஆய் நி என்ற அந்தப் பெண் ஊழியர், தனக்குக் கார் பரிசு கிடைத்தது குறித்து சமூக ஊடகம் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஊழியர்களிடம் சொன்னபடி நடந்துகொள்ளும் முதலாளியைக் கொண்டுள்ள நல்லதொரு நிறுவனத்தில் வேலைசெய்ய தான் கொடுத்துவைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.