கோலாலம்பூர்: ஜப்பான், இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான மலேசியாவின் புதிய தூதர்கள் 15 பேருக்கு அந்நாட்டு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் திங்கட்கிழமை (மே 18) நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற அதிகாரபூர்வச் சடங்கில் இதற்கான நியமன ஆவணங்கள் வழங்கப்பட்டன.
ஜப்பானுக்கான மலேசியத் தூதராக அகமது ரோசியான் அப்துல் கனி, சிங்கப்பூருக்கான மலேசியத் தூதராக அனிசான் சித்தி ஹாஜர் அத்னின், இங்கிலாந்துக்கான மலேசியத் தூதராக டாக்டர் அஸ்ஃபார் முகம்மது முஸ்தஃபா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அவர்களுடன் ஆஸ்திரியா, நியூசிலாந்து, ஃபின்லாந்து, துருக்கி உள்ளிட்ட மேலும் 12 நாடுகளுக்கான தூதர்களும் தங்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், மலேசியாவுக்கான புதிய வெளிநாட்டுத் தூதர்கள் ஏழு பேர் சமர்ப்பித்த தூதரக நற்சான்றிதழ்களையும் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் ஏற்றுக்கொண்டார். இலங்கை, மொரோக்கோ, பனாமா உள்ளிட்ட ஏழு நாடுகளின் தூதர்கள் இதில் அடங்குவர்.

