ஜோகூர் பாரு: மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஊழலை முறியடிப்பதற்கான முயற்சிகள் எந்தவித சமரசமும் இன்றி முழுவீச்சில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஜோகூர் மாநில அரசாங்கத்துக்குக் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் அமைப்புகளிலும் ஊழலை முடக்குவதற்கான முயற்சிகள் நடைபெறவேண்டும் என்றார் அவர்.
ஜோகூரின் சுல்தானுமான மாமன்னர் இப்ராஹிம், நாட்டின் வளமையையும் நீடித்த செழிப்பையும் கட்டிக்காக்க நேர்மையும் நிர்வாகத்தில் உள்ள வெளிப்படத்தன்மையும் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
ஜோகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸியிடமும் மாநிலச் செயலாளர் முகமது ரிடா அப்துல் காதரிடமும் மாமன்னர் இப்ராஹிம் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டதாக அவரது ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.
அவர்கள் பாசிர் பெலாங்கியில் உள்ள மாளிகையில் மாமன்னரை நேரில் சந்தித்துப் பேசினர்.
முதலமைச்சர் ஒன் ஹஃபிசுடன் பாசிர் கூடாங் நகரமன்ற மேயர் திருவாட்டி ஹஸ்லினா ஜலீலும் ஹோகூரின் நில, சுரங்க இயக்குநர் முகமது ஷாகிப் அலியும் இருந்தனர்.
அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் மாமன்னருடன் பேசினர். திரு ஒன் ஹஃபிஸ், ஜோகூர் மாநிலத்தின் தற்போதை மேம்பாடுகள் பற்றியும் துரித வளர்ச்சி பற்றியும் மாமன்னரிடம் பகிர்ந்துகொண்டார்.

