கோலாலம்பூர்: கடன்முதலைகளிடம் சட்டவிரோதமாகப் பெற்ற கடனை அடைக்க முடியாத ஆடவர், அவரது உயிருக்கு ஆபத்து என்று பெற்றோரிடம் பொய்யுரைத்து, S$9,500 பிணைத்தொகையைப் பெற முயன்றார்.
இதன் விவரங்களை மலேசியச் சீனர் சங்கம் புதன்கிழமை (ஜூலை 29) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் விளக்கியது.
கடனை அடைப்பதற்குத் தாம் கடத்தப்பட்டதாகப் பெற்றோரிடம் ஆடவர் கூறினார். கடத்தல் சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், 24 மணிநேரத்தில் அவர் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர்.
ஆனால் கடன்கொடுத்தோரின் உதவியுடன் அந்த ஆடவர் குளுவாங் பகுதியில் உள்ள சுங்கை புலோ என்ற இடத்தில் இருந்த மலிவுக் கட்டண ஹோட்டல் ஒன்றில் ஆள்கடத்தல் நாடகத்தை நடத்தியது அப்போது தெரியவந்தது.
தலைநகரில் இயங்கும் மலேசியச் சீனர் சங்க பொதுச் சேவைகள், புகார்கள் துறையின் தலைவர் மைக்கல் சோங் இச்சம்பவம் குறித்து கருத்துரைத்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 28 வயது கிராப் வாகன ஓட்டுநர், ஏற்கெனவே இதேபோன்று சட்டவிரோதக் கும்பலிடம் ஏறத்தாழ S$14,000க்குக் கடன்பட்டு, இவ்வாண்டு மே மாதம் அவரது தந்தை அவரைக் கடனிலிருந்து மீட்டதாக அவர் கூறினார்.
இனிமேல் கடன்முதலைகளிடம் கடன்வாங்கப் போவதில்லை என்று தந்தையிடம் உறுதிகூறிய ஆடவர், தற்போது மீண்டும் அதனைச் செய்துள்ளார் என்று திரு மைக்கல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

