சிபா: ஜப்பான் தலைநகர் தோக்கியோ அருகே உள்ள நரிட்டா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் புறப்படவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணத்தை திடீரென ரத்து செய்தது.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) காலை உள்ளூர் நேரப்படி 10.40 மணியளவில் விமானம் ஓடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்தபோது, அதிலிருந்து கரும்புகை வெளியேறியதைத் தொடர்ந்து, உடனடியாகத் தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளின் எச்சரிக்கையால் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தின் ‘ஏ’ ஓடுபாதை உடனடியாக மூடப்பட்டது.
விமானத்தில் இருந்த 160 பயணிகளும் ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.
சம்பவ இடத்தைச் சூழ்ந்த தீயணைப்பு வாகனங்கள், அவசர சிகிச்சை ஊர்திகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.
விமானக் கோளாற்றுக்கான காரணம் குறித்து ஜப்பான் போக்குவரத்து அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.


