ஜோகூர் பாரு: சிங்கப்பூரர்களையும் மலேசியர்களையும் குறிவைத்துச் செயல்பட்ட மோசடி அழைப்பு நிலையக் கும்பலை மலேசியக் காவல்துறை முறியடித்துள்ளது.
இதுதொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 20 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அந்த ஏழு பேரும் ஜோகூர் மாநிலத்தில் உள்ள இஸ்கந்தர் புத்ரி பகுதியில் உள்ள இரண்டு அடுக்குமாடி வீடுகளிலிருந்து செயல்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உதவி தேவைப்படுவோரைப் போல நடித்து அவர்களது நண்பர்களுடன் இக்கும்பல் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது.
தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கடும் துயரில் இருப்பதுபோல பாசாங்கு செய்து பணம் அனுப்பிவைக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
அண்மைய வாரங்களில் பிடிப்பட்ட மோசடிக் கும்பல்களில் இதுவே மூன்றாவது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 20க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களிடம் இருந்த பல கைப்பேசிகள் உட்பட பல சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மோசடிக் குற்றங்கள் தொடர்பாகச் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக மலேசியக் காவல்துறை கூறியது.
முன்பின் அறிமுகம் இல்லாதோரிடம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்குக் குறிப்பாக, மூத்தோருக்கு மலேசியக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.