மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூருக்கான பொருளியல் ஆலோசகராக இருந்தபோது அவருக்கு 15 மில்லியன் ரிங்கிட் (S$4.6 மி.) வழங்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கூறியிருந்தார்.
அவ்வாறு கூறியதற்காக திரு முகைதீன் மீது பிரதமர் அன்வார் வழக்கு தொடுக்கிறார்.
திரு முகைதீனை நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகுமாறு Messrs SN Nair and Partners சட்ட நிறுவனம் உயர் நீதிமன்ற பதிவகத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 20) மனுவைத் தாக்கல் செய்தது.
பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அஸ்மான் நஸ்ருதீனை ஆதரித்து டிசம்பர் 5ஆம் தேதி கெடாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது திரு முகைதீன் அவ்வாறு கூறியிருந்ததாக பிரதமர் அன்வார் சொன்னார்.
டிக்டாக் தளத்தில் "@beritakini8" எனும் பெயரின்கீழ் உள்ள கணக்கு மூலம் அந்த உரை விவரங்கள் வெளியிடப்பட்டன.
டிசம்பர் 7ஆம் தேதி நிலவரப்படி, அந்தக் காணொளி 1.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதற்கு 6,000க்கும் மேற்பட்ட கருத்துகளும் 21,400க்கும் மேற்பட்ட விருப்பக்குறிகளும் பதிவாகின.
'முகைதீன் யாசின்' எனும் பெயரின்கீழ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தமது முழு உரையையும் பிரதிவாதி மீண்டும் வெளியிட்டதாக பிரதமர் அன்வார் கூறினார்.
திரு முகைதீனின் அவதூறான சொற்கள், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடமிருந்து மில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டது தொடர்பில் தாம் நம்பகத்தன்மை இல்லாதவர், உண்மை இல்லாதவர் என்பதைக் காட்டுவதுபோல் இருப்பதாக பிரதமர் அன்வார் சொன்னார்.


