ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் பலர் விடுமுறைக்கும் மலேசியாவில் வீட்டுப் புதுப்பிப்புப் பணிகளுக்கும் திட்டமிடுகின்றனர். மலேசிய ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதே அதற்குக் காரணம்.
திரு ஜேசன் வோங், 27, அன்றாடம் எல்லையைக் கடந்து சிங்கப்பூரில் பணிபுரிவதற்கான தமது முடிவு சரியான ஒன்று எனக் கூறினார். ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.5 என்று பதிவாகியுள்ளதால், இப்போது தம்மிடம் அதிக பண இருப்பு உள்ளதாக அவர் சொன்னார்.
அடுத்த ஆண்டு தமது பெற்றோரை முதன் முறையாக விடுமுறைக்கு அழைத்துச்செல்ல தாம் சேமித்து வருவதாகவும் அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை காலை, ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 3.5086 என ஒரு புதிய உச்சத்தைத் தொட்டது.
சிங்கப்பூரில் கொள்முதல் நிர்வாகியாகப் பணிபுரியும் திரு அர்டி ஸைனுடின், 33, மலேசியாவில் உள்ள தமது புதிய வீட்டைப் புதுப்பிக்கக் கூடுதல் பணம் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இருப்பினும், மலேசிய அரசாங்கம் ரிங்கிட்டின் மதிப்பை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளை அறிமுகப்படுத்தும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
ஜோகூர் பாருவில் உள்ள சில பிரபல நாணய மாற்று வர்த்தகர்கள், ரிங்கிட்டுக்கான தேவை அதிகரித்திருப்பதை முன்னிட்டு, தாங்கள் போதுமான நாணயத்தைக் கையிருப்பில் வைத்திருப்பதாகக் கூறியதாக தி ஸ்டார் நாளேடு தெரிவித்தது.