புத்ராஜெயா: மலேசிய உணவுப் பாதுகாப்பு குறியீடு 2024ல் 61.5 என்ற மதிப்பெண்ணைப் பதிவுசெய்துள்ளது. இது 2023ல் 54.5ஆக இருந்ததை விட அதிகமாகும். இது நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிலை சரியான பாதையில் செல்கிறது என்பதைக் குறிக்கிறது.
மலேசியப் புள்ளிவிவரத் துறையின் தலைமைப் புள்ளியியலாளர் டாக்டர் முகமது உசிர் மஹிதின், “மதிப்பீடு செய்யப்பட்ட நான்கு முக்கியப் பரிமாணங்களில், அணுகல்தன்மை 79.9 என்ற மிக உயர்ந்த மதிப்பெண்ணைப் பதிவுசெய்துள்ளது என்றும் அதனைத் தொடர்ந்து நிலைத்தன்மை (54.6), பயன்பாட்டுத்தன்மை (50.4), பொருள்கள் கிடைக்கும்தன்மை (50) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன,” என்றும் தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் பற்றாக்குறையை இறக்குமதி மூலம் ஈடுகட்ட முடியும் என்பதால், மலேசியா உணவுப் பொருள்களைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை என்பதையே இந்த உயர் அணுகல் மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது என்று அவர் கூறினார்.
இருப்பினும், கிடைக்கும் தன்மை, குறிப்பாக உள்நாட்டு உற்பத்தி, இன்னும் மேம்படுவதற்கு நிறைய இடமுள்ளது என்று அவர் கூறினார்.
“இதனால்தான், விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த நடவடிக்கை நாட்டின் உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை மேலும் மேம்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அவர் திங்கட்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற சிம்ஃபனி டேட்டா டான் மீடியா சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூறினார்.

