கோலாலம்பூர்: மலேசியாவின் ஆட்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறவிருந்த மாநாட்டை ஒத்திவைத்துள்ளனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சி குறித்த சர்ச்சை தீவிரமடைந்துவரும் நிலையில், மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி திட்டமிடப்பட்டிருந்த மாநிலத் தேர்தல்கள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாமன்னர்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டதைச் செவ்வாய்க்கிழமை காலையில் தேசிய அரண்மனையின் பேச்சாளர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். இருப்பினும், அதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
நெகிரி செம்பிலான் அரியணைக்கு இருவர் உரிமை கோருகின்றனர். இந்நிலையில், இந்த மாநாட்டைத் தொடர்வது முறையானதுதானா என்பது குறித்த அக்கறைகள் எழுந்ததாக மாநில முதல்வர் உட்பட சிலர் தெரிவித்தனர்.
மலேசியாவில் மாமன்னர்கள் மாநாடு ரத்து செய்யப்படுவது அரிதான ஒன்று. இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டில் கொவிட்-19 முடக்கநிலையின்போதுதான் அத்தகைய மாநாடு ரத்து செய்யப்பட்டது.

