மாலே: மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் துணை அமைச்சர் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தனர்.
சுற்றுப்புறம், பருவநிலை மாற்றம், எரிசக்தித் துணை அமைச்சர் ஃபாத்திமா ஷம்னாஸ் அலி சலீமும் வேறு இருவரும் தலைநகர் மாலேவில் ஜூன் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது.
விசாரணைக்காக ஒரு வாரத்திற்கு அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அதிகாரிகள், அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து மேல்விவரங்களைக் கூறவில்லை.
“அதிபர் முகம்மது முய்சுவுக்கு எதிராக சூனியம் செய்ததற்காக ஷம்னாஸ் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வலம் வருகின்றன,” என்று உள்ளூர் செய்தி நிறுவனமான தி சன் கூறியது.
அந்தத் தகவலைக் காவல்துறை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
முஸ்லிம் பெரும்பான்மை நாடான மாலத்தீவில் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்கீழ், சூனியம் செய்வது குற்றமாகக் கருதப்படாது. ஆனால், இஸ்லாமியச் சட்டத்தின்கீழ் அச்செயலுக்காக ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

