தோக்கியோ: ஜப்பானில் ஆண்கள் மட்டுமே மன்னர் வம்சாவளியைத் தொடரச் செய்வதற்கு வழிவகுக்கும் விதிமுறைகளை மாற்றுவதைத் தாம் எதிர்ப்பதாக அந்நாட்டுப் பிரதமர் சானே தக்காய்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் திருவாட்டி தக்காய்ச்சியின் கருத்து இதுவரை இல்லாத அளவு தெளிவாக, வெளிப்படையாக உள்ளது. மன்னர் வம்சம் தொடர்வது குறித்து ஜப்பானில் விவாதம் தீவிரமடைந்துவரும் நிலையில் அவரின் கருத்துகள் வெளிவந்துள்ளன.
மன்னர் வம்சத்தைத் தொடரச்செய்யும் உரிமை ஆண்களுக்கே வழங்கப்படவேண்டும் என்று 2021ஆம் ஆண்டு வல்லுநர்க் குழு ஒன்று தீர்மானித்ததைத் தாம் மதிப்பதாக திருவாட்டி தக்காய்ச்சி கூறினார்.
“அரசாங்கமும் நானும் அந்த அறிக்கையின் முடிவுகளை மதிக்கிறோம்,” என்று அவர் சொன்னார்.
மன்னர் வம்சம் தொடர்வது குறித்த விதிமுறைகளை மாற்றியமைப்பது உடனடியாகக் கையாளப்படவேண்டியது என்றும் அதேவேளை அதற்கென புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.
பாரம்பரிய நடைமுறைப்படி மன்னர் வம்சத்தை ஆண்கள் மட்டும்தான் முன்னெடுத்துச் செல்லலாம். இந்த விதிமுறை 2,600 ஆண்டுகளாக இருந்து வருவதாக நம்பப்படுகிறது.
எனினும், பெண்களும் அரியணையில் அமர்வதற்குப் பொதுமக்களிடையே வலுவான ஆதரவு இருப்பதைக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
ஜப்பானிய மன்னர் நருஹித்தோவுக்கு இளவரசி மய்க்கோ எனும் மகள் இருக்கிறார். ஆனால், மன்னர் வம்சத்தைத் தொடர ஆண்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்ற காரணத்தால் இளவரசி அய்க்கோ ஒதுக்கப்பட்டிருக்கிறார்.

