பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஜோகூர் மன்னருக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகைக்குள் சென்ற மாதம் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
வேலை இல்லாத கமாருலஸீம் சமத், 20, என்ற அந்த ஆடவர், அக்குற்றங்களைப் புரிந்ததை பத்து பகாட் நீதிமன்றம் ஒன்றில் ஒப்புக்கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி, ஜோகூர் மன்னரின் விருந்தினர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சமத்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
துணை அரசாங்க வழக்கறிஞர் ஃபாரா வஹிதா ஷாரிப் அரசுத் தரப்பு வாதத்தை வழிநடத்தினார். குற்றஞ்சாட்டப்பட்டவரை எந்த வழக்கறிஞரும் பிரதிநிதிக்கவில்லை.
சமத்துக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். வரும் நவம்பர் மாதம் 21ஆம் தேதியன்று இந்த வழக்கில் விவரங்கள் வெளியிடப்படும், குற்றஞ்சாட்டப்பட்டவருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமத்தை[ பிணையில் விடுவிக்க 4,000 ரிங்கிட் (1,215 வெள்ளி) பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை மாதந்தோறும் 1, 15ஆம் தேதிகளில் பாரிட் ராஜா காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

