கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற பாட்டிக் ஏர் விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்றதாகக் கூறப்படும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமானம் கிட்டத்தட்ட 9,144 மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது 36 வயது ஜம்ஷீர் அதானிக்கால், அவசரகால கதவைத் திறக்க முயற்சி செய்தாகக் கூறப்பட்டது.
மலேசியாவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்ட பாட்டிக் ஏர் விமானத்தில் ஜம்ஷீர் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகத் தெரிகிறது.
12ஏ இருக்கையில் ஜம்ஷீர் அமர்ந்திருந்தார் என்றும் இரவு 9.30 மணியிலிருந்து 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சம்பவம் நேர்ந்தது என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ், கோஸ்மோ! ஆன்லைன் ஆகிய தளங்கள் குறிப்பிட்டன.
“ஆடவரி யாரும் கோபமூட்டவில்லை. இருந்தபோதும், அவசரகால கதவை அவர் திறக்க முயன்றார். விமானத்தின் சன்னலையும் சேதப்படுத்தியதுடன் தம்மைத் தடுக்க முயற்சி செய்த பிற பயணிகளையும் விமான ஊழியர்களையும் அவர் மிரட்டினார்,” என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. அதில் விமானத்தின் பல்வேறு ஊழியர்கள் ஜம்ஷீரைக் கட்டிப்போட முயல்வதைக் காண முடிகிறது.
கொச்சி அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதை அடுத்து ஜம்ஷீர் கைதுசெய்யப்பட்டார். குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது, பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற தவறியது, பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்க முயன்றது ஆகியவற்றின் அடிப்படையில் ஆடவர் கைதானார்.
அவசரகால கதவைத் திறக்க முற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்த காவல்துறையினரிடம், திடீரென அவ்வாறு செய்யத் தோன்றியதாக ஜம்ஷீர் கூறினார்.


