திருமணமாவதற்கு முன்பே தங்கக் கட்டிகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், 9.98 மில்லியன் யுவான் (S$1.9 மில்லியன்) ரொக்கம் எனப் பரிசுகளால் தமது வருங்கால மனைவியைத் திக்குமுக்காட வைத்துள்ளார் சீனாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர்.
சீனர்களுக்குப் பிடித்தமான செந்நிறத்திலான ஆறு பெட்டிகளில் அவை அனுப்பி வைக்கப்பட்டன. அந்த ரொக்கம் முழுவதும் மணப்பெண்ணின் வங்கிக் கணக்கில் போடப்படும் எனக் கூறப்பட்டது.
இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி, இணையவாசிகளை வாய்பிளக்க வைத்துள்ளது.
இப்படித் திருமணத்திற்குமுன் மணப்பெண்ணுக்குப் பரிசளிப்பது சீனாவின் கிழக்கு மாநிலமான ஸெஜியாங்கின் டைஸோ நகரில் வழக்கமான ஒன்றுதான் எனச் சொல்லப்படுகிறது.
பரிசுகளை அனுப்பிவைத்த 30 வயதான திரு யான் அவரின் மணப்பெண்ணும் இவ்வாண்டு இறுதியில் மணமுடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இப்படி மணப்பெண்ணுக்கு ஆடம்பரப் பரிசுகளை வழங்கும் வழக்கத்தை ஒழிக்க அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வந்தாலும் அது சற்றும் குறைவதாகத் தெரியவில்லை.
இந்த வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக, அதாவது ஹான் அரச மரபிலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதால் ஒரே இரவில் அதனை ஒழிக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது.