கர்ப்பிணிக் காதலியை வெட்டிக் கொன்ற ஆடவர் கைது

கர்ப்பிணிக் காதலியை வெட்டிக் கொன்ற ஆடவர் கைது

2 mins read
f707cb96-05f6-4b38-b263-1f8e33285100
உயிரிழந்த கர்ப்பிணியின் மருத்துவப் பரிசோதனை புகைப்படத்தைக் காட்டும் காவல்துறை அதிகாரி. படம்: பெர்னாமா -

தாம் கர்ப்பமாக இருப்பதை மறைக்க தம் காதலி விரும்பாததால், மலேசிய ஆடவர் ஒருவர் அவரை வெட்டிக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதன் பிறகு, அக்கொடூரச் செயலை மூடிமறைக்க, அவர் இரண்டு முறை காதலியை எரித்ததாக உள்ளூர்க் காவல்துறையினர் கூறினர்.

சிலாங்கூரின் சுங்கை பெசாரில் உள்ள எண்ணெய் பனை தோப்பு ஒன்றில், எரிக்கப்பட்ட உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

எரிந்துபோன புல்லின்மேல், ஒரு பெண்ணின் கருகிய உடலைக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம்வந்தன.

உள்ளூர் கல்லூரி ஒன்றில் அண்மையில் படிப்பை முடித்த 20 வயது ஆடவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (மே 23) கைதுசெய்தனர். உள்ளூர் உணவகம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டிருந்த பெண்ணுடன் அந்த ஆடவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை (மே 22) கர்ப்பிணியை அந்த ஆடவர் பனை தோப்புக்குக் கொண்டுசென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருவருக்கும் ஒராண்டுப் பழக்கம் இருந்ததாகவும் அந்தப் பெண் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஆகுஸ் சலீம் கூறினார். கொலை நடந்த ஐந்து நாள்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஊடுகதிர் படத்தை அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

கள்ளத்தொடர்பின் விளைவாக அந்தப் பெண் கர்ப்பமடைந்ததாகவும் கர்ப்பமாக இருந்ததை ரகசியமாக வைத்திருக்க அவர் மறுத்ததாலும் அந்த ஆடவர் சினமடைந்ததாக நம்பப்படுவதாக திரு ஆகுஸ் கூறினார்.