கலிபோர்னியா: அமெரிக்காவின் சுற்றுலா முகாம் ஒன்றில் கழிவறைக்குள் தவறி விழுந்த தமது கண்ணாடியை எடுக்க முயன்ற ஆடவர் ஒருவர், எதிர்பாராதவிதமாகக் கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் சிக்கிய சம்பவம் நிகழ்ந்தது.
கலிஃபோர்னியாவின் ஷேவர் லேக்கில் உள்ள எடிசன் முகாமில் உள்ள கழிவறைக்குக் கீழிருக்கும் கழிவுநீர்த் தொட்டிக்குள் ஆடவர் ஒருவர் சிக்கிக்கொண்டதாக ஜூன் 20ஆம் தேதி தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஃபிரெஸ்னோ கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அந்த ஆடவர் வேதிக் கலவை கொண்ட கழிவுநீர்த் தொட்டிக்குள் தமது கண்ணாடியைத் தவறவிட்டதை அதிகாரிகள் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டது.
“அதைத் திரும்ப எடுக்கும் முயற்சியில், அந்த ஆடவர் கழிவறைத் துளையின் வழியே பல அடி ஆழமுள்ள தொட்டிக்குள் தவறி விழுந்தார். நிலைமையைக் கண்டு பதறிய அவர், உதவி கேட்டு சத்தமாகக் கூச்சலிடத் தொடங்கினார்,” என்று அப்பதிவில் தெரிவிக்கப்பட்டது.
துர்நாற்றம் வீசிய கழிவுநீர்த் தொட்டிக்குள் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தவித்த அந்த ஆடவர், ஒருவழியாகப் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டார்.
“சிறுநீர், மலம், ஆபத்தான வேதிப்பொருள் உடலில் பட்டிருந்ததால், அவர் உடனடியாகத் தூய்மைப்படுத்தப்பட்டார்,” என்று அதிகாரிகள் கூறினர்.
இறுதியில் அந்த ஆடவர் தமது கண்ணாடியை மீட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை என்றாலும், அவர் எந்தவொரு காயமுமின்றி வீடு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

