கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரிசுச்சீட்டு வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த ஆடவர் ஒருவருக்கு ஒருவழியாக அதிர்ஷ்டக் கதவு திறந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த ராபின் ரீடல் என்ற இந்த ஆடவர், என்றேனும் ஒருநாள் தமக்குப் பரிசு விழும் என்ற நம்பிக்கையில் கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து பெரும் நம்பிக்கையுடன் பரிசுச்சீட்டு வாங்கி வந்தார்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று ஓரிகன் லாட்டரியில் அவருக்குப் பரிசு விழுந்தது. இதன்மூலம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் வாரந்தோறும் 1,000 அமெரிக்க டாலர் (S$1,340) வழங்கப்படும்.
கட்டுமானப் பொருள் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்துவரும் ரீடலுக்கு ஆண்டிற்கு 52,000 அமெரிக்க டாலர் கிடைக்கும். அப்பணத்தைக் கொண்டு மூன்றாண்டுகளுக்குமுன் வாங்கிய வீட்டைப் புதுப்பிக்க இருப்பதாகவும் விரைவில் திருமண நாள் வரவிருப்பதால் தம் மனைவியுடன் சேர்ந்து செயின்ட் லூசியாவிற்குச் சுற்றுலா செல்லவிருப்பதாகவும் ரீடல் கூறினார்.
மேலும், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் வேலையிலிருந்து ஓய்வுபெற முடியும் என்றும் ரீடல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.