பிலிப்பீன்ஸ்: மணிலாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல கடைத்தொகுதியில் இன்று (மார்ச் 2) ஆடவர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி அங்கிருந்த 30 பேரை பிணையாளியாக பிடித்துவைத்தார்.
இதுவரை, ஒருவர் துப்பாக்கிக் காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார் என்று சென் ஜுவான் மேயர் சமோரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிற்பகல் போல் 'வி-மால்' (V-Mall) கடைத்தொகுதியில் துப்பாக்கி தோட்டா சத்தம் கேட்டதாக அம்மாவட்ட போலிஸ் மேல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அங்கிருந்த சுமார் 1,000 பேர் கடைத்தொகுதியிலிருந்து வெளியேற முயன்றனர் என தெரிவிக்கப்பட்டது.
முன்பு அக்கடைத்தொகுதியில் வேலை செய்த பாதுகாவல் அதிகாரி அக்கடைத்தொகுதியில் வேலை செய்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாகவும் அக்கடைதொகுதியின் அலுவலகத்தில் தம்மை பூட்டிக்கொண்டு அங்கிருந்த 30 பேரை பிணையாளி ஆக்கியதாகவும் மேயர் சமோரா சொன்னார்.
அதோடு, சில வாரங்களுக்கு முன், அந்த பாதுகாவல் அதிகாரி வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தமது கோரிக்கையை முன்வைப்பதற்காக அலுவலகத்திற்கு வந்திருந்ததாகவும் கூறப்பட்டது.
மேற்கொண்ட பாதிப்பை அந்த ஆடவர் உண்டாக்காமல் இருக்க, மேயர் சமோரா அவருடன் திறன்பேசி வழி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட இது தொடர்பான காணொளிகள் போலிஸ் வாகனங்கள் கடைத்தொகுதியின் வெளியே நிறுத்தப்பட்டிருப்பதை காட்டின.
இச்சம்பவம் கடந்த மாதம் தாய்லாந்தின் கடைத்தொகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது.
அதில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட, 58 பேர் காயமடைந்தனர், குறைந்தது 29 பேர் பலியாயினர்.

