மெக்சிகோ சிட்டி: சர்க்கரை இறக்குமதிக்குப் புதிய வரியை நவம்பர் 11ஆம் தேதி மெக்சிகோ அறிவித்துள்ளதாக அதிகாரத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்துலக அளவில் சர்க்கரையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாலும் உள்நாட்டுச் சந்தையில் அந்த உணவுப் பொருளின் விநியோகம் அதிகப்படியாகும் அபாயம் இருப்பதாலும் இந்தப் புதிய வரியை அந்நாடு அமல்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு கிலோ சர்க்கரைக்கு 156 விழுக்காடு அடிப்படை வரி உயர்வை மெக்சிகோ அறிவித்துள்ளது.
இந்தப் புதிய வரி, பீட் சர்க்கரை, ‘சிரப்’ எனும் இனிப்புப் பாகு உட்பட அனைத்து வகையான சர்க்கரைகளுக்கும் பொருந்தும்.
மெக்சிகோ அதிபர் குளோடியா ஷெயின்பம் கையெழுத்திட்டு நவம்பர் 10ஆம் தேதி இரவு அந்நாட்டு அதிகாரத்துவ அரசிதழில் வெளியான உத்தரவின்படி, சுத்திகரிக்கப்பட்ட திரவ சர்க்கரைக்கு 210.44 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு டன் சர்க்கரைக்கு 360 அமெரிக்க டாலருக்கும் 390 அமெரிக்க டாலருக்கும் இடைப்பட்ட மதிப்பில் மெக்சிகோ வரி விதித்து வந்தது.

