எம்எச்370 விமானச் சேவையில் காணாமற்போன எட்டுப் பயணிகளுக்கு இழப்பீடு தர மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகச் சீனாவிலுள்ள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்த விமானம் மாயமாகி பத்தாண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலேசியன் ஏர்லைன்சின் அனைத்துலகப் பிரிவான மலேசியன் ஏர்லைன்ஸ் இன்டர்நேஷனலுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் சமரசமாகப் போனதை அடுத்து, மற்ற 47 நீதிமன்ற வழக்குகள் மீட்டுக்கொள்ளப்பட்டதாகச் சாவ்யாங் வட்டார மக்கள் நீதிமன்றம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
டிசம்பர் 5ல் வெளிவந்த இந்த இழப்பீட்டு உத்தரவு, இறுதிச் சடங்குச் செலவுகள், மன வலி உள்ளிட்ட பல வகையான பாதிப்புகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அந்த உத்தரவின்படி, ஒவ்வொரு குடும்பமும் 2.9 மில்லியன் யுவானுக்கு (531,769 வெள்ளி) மேற்பட்ட தொகையைப் பெறவுள்ளது.
போயிங் 777 ரக விமானமான எம்எச்370ல் 239 பேர் மாயமானார்கள். கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் சென்றுகொண்டிருந்தபோது உணர்கருவிகளின் கண்காணிப்பிலிருந்து விமானம் திடீரென மறைந்தது.

