தாப்பா: மலாக்கா மாநிலத் தேர்தலில் அதன் ஒரே சட்டமன்றத் தொகுதியான கடேக்கை தக்கவைக்க மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇக) கட்சி அங்கு போட்டியிடும் என்று அதன் தேசிய துணைத் தலைவர் சரவணன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளார்.
கட்சி போட்டியிட விரும்பும் மற்ற கூடுதல் தொகுதிகளுடன் பற்பல அம்சங்களை மேலிடம் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
போட்டியிடும் தொகுதிகள், அங்குள்ள வாக்காளர்கள், நிறுத்தப்படும் வேட்பாளர்கள், அவர்களது திறமை, வெற்றியை நிர்ணயிக்கும் தகுதி ஆகியவற்றை கட்சித் தலைமை ஆராய்ந்து வருகிறது என்றார் அவர்.
கட்சித் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வேட்பாளர்கள் தேர்வை நடத்தி வருவதாகவும் விரைவில் முடிவுகள் வெளிவரும் எனவும் திரு சரவணன் கூறினார்.
தாப்பா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திரு சரவணன், தமது தொகுதியில் உள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நடந்த மடிக் கணினி வழங்கும் நாடாளுமன்றத் திட்டத்துக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரது கருத்துகளை வெளியிட்டார்.
மலாக்கா மாநிலத்தில் 2021ல் நடந்த தேர்தலில் தேசிய முன்னணிக் கூட்டணியின்கீழ் மஇகா கட்சி கடேக் தொகுதியில் போட்டியிட்டது. ஆறு வேட்பாளர்களுக்கு இடையே நடந்த போட்டியில் விபி சண்முகம் 558 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.


