கடந்த 20 ஆண்டுகளாக உலகின் வெவ்வேறு நாடுகளில் உள்ளோர் தொடர்பு கொள்ள வசதியாக அமைந்த ஸ்கைப் தளம் இவ்வாண்டு மே மாதத்துடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கைப் சேவையை நிறுத்திக்கொள்வதன் மூலம் மைக்ரோசாஃப்ட் தனது சொந்த தொடர்புச் சேவைத் தளமான ‘டீம்ஸ் ‘ மீது கவனம் செலுத்தி அதனை எளிமைப்படுத்த முடியும் எனத் தான் நம்புவதாக மைக்ரோசாஃப்ட் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28ஆம் தேதி) கூறியது.
ஸ்கைப் சேவை 2003ஆம் ஆண்டு தொடங்கியது. அதன் சிக்கனமான, ஒலி, காணொளிச் சேவையை உலகிலுள்ள பல மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தத் தொடங்கியதால், அது மிக விரைவிலேயே தரைவழி தொலைபேசிச் சேவைக்கு இடையூறாக உருவெடுத்தது.
ஸ்கைப் சேவையின் தற்போதைய வீழ்ச்சியின் காரணம் அதன் தொழில்நுட்பம் விவேகம் நிறைந்த திறன் கைத்தொலைபேசி யுகத்துக்கு பொருத்தமில்லாத ஒன்றாகக் கருதப்படுவதால்தான் எனலாம்.
கொள்ளைநோய் பரவி வீட்டிலிருந்து வேலை செய்வது வாடிக்கையானதும் இணையவழி வர்த்தக சந்திப்புப் பேச்சுவார்த்தைகளின் தேவை அதிகரித்தது. இந்நிலையில்தான், மைக்ரோசாஃப்ட் தனது ‘டீம்ஸ்’ சேவையை அலுவலக செயலிகளுடன் இணைத்து, முன்னர் ஸ்கைப் சேவையைப் பயன்படுத்திய, நிறுவன ஊழியர்களை தன்னுள் ஈர்த்தது.