பெட்டாலிங் ஜெயா: ஜோகூரில் ஞாயிறு (ஜூன் 21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது ஆபத்தான அளவில் இல்லை என்றும் மலேசிய வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.
அதிகாலை 1.17 மணிக்கு ஜோகூரின் பத்து பகாட் கடல் வட்டாரத்தில் ஏற்பட்ட 3.3 ரிக்டர் நிலநடுக்கம் பலவீனமானது என்று அது குறிப்பிட்டது.
பத்து பகாட்டிலிருந்து ஏறத்தாழ 20 கி.மீ. தென்மேற்கே 1.7 டிகிரி வடக்கு மற்றும் 102.7 டிகிரி கிழக்கு என்ற அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையில் நிலநடுக்க மையப்புள்ளி காணப்பட்டதாகவும் ஆய்வு நிலையம் தெரிவித்தது.
வலுவில்லாத அந்த நிலநடுக்கம் கடல்நீரில் 10 கி.மீ. ஆழத்தில் பதிவானது. அதனால் பத்து பகாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் உணரப்படலாம் என்றது அது.
நிலைமையை ஆய்வு நிலையம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று அது ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

