டெஹ்ரான்: ஈரானின் மறைந்த தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு தலைநகர் ஈரானில் சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்கியுள்ளது.
அதன்படி, அடுத்த மூன்று நாள்களில் 15 முதல் 20 மில்லியன் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவர் என்று எதிர்பார்ப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்நாட்டு எதிரிகளுக்கு மக்கள் தங்கள் தலைவர்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்ட இந்த நிகழ்வு உதவும் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான்மீது நடத்திய முதல்நாள் தாக்குதலில் பெருந்தலைவர் காமெனி, அவருடன் இருந்த குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார்.
ஏறத்தாழ 37 ஆண்டுகள், 1989 முதல் ஈரானை தனி ஒருவராக ஆட்சி செய்த அவருக்கு வயது 86. ஆறு நாள்கள் வரை இறுதிச் சடங்குகள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த தலைவரின் பதவியை ஏற்றுள்ள மகன் மொஜ்தபா காமெனி சடங்குகளில் பங்கேற்பாரா என்பதைப் பலர் கவனித்து வருகின்றனர். ஏனெனில் அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பொது நிகழ்வுகளில் அவர் அதிகம் பங்கேற்பதில்லை.
டெஹ்ரானின் சமய நிகழ்வுகளுக்கென பயன்படும் மாபெரும் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் சனிக்கிழமை காலை முதல் திரண்டுள்ளனர். பல கிலோமீட்டர் தூரம் அவர்கள் நடந்து வந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை மாலை முதல் நினைவக வளாகத்தின் வெளியில் காத்திருந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
நினைவாலயத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள சாலைகளும் ஆகாய வெளிகளும் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படலாம்.
1989ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் ஈரானுடனான போரின் முதல் நாளில் தனது 86 வது வயதில் அலி காமெனி கொல்லப்படும் வரை மிகப்பெரிய அளவில் செய்யப்படும் பொது நிகழ்வாக இது கருதப்படுகிறது.
மறைந்த தலைவரின் உடல் திங்கட்கிழமை (ஜூலை 6) வரை நினைவகத்தில் வைக்கப்பட்டு, பிறகு அன்றைய தினம் டெஹ்ரானில் இறுதி ஊர்வலம் நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை அது குவோம் நகருக்குச் சென்று, பிறகு புதன்கிழமை ஈராக்கில் உள்ள ஷியா பிரிவின் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.
அதன்பிறகு, வியாழக்கிழமை (ஜூலை 9) அலி கமெய்னியின் பிறப்பிடமான ஈரானின் வடகிழக்கில் உள்ள மஷாத் நகரில் அவரது உடலுக்கு கடைசி மரியாதைகள் செலுத்தப்பட்டு அங்குள்ள இடுகாட்டில் கிடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

